கனடாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனிலிருந்து சுமார் 06 கிலோ எடையுள்ள குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க வருமான கண்காணிப்பு குழுவினர் கடந்த மாதம் 25 இல், கொள்கலனை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்கலனுக்குள் ஆறு கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கபட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்போதைப்பொருள் கனடாவிலிருந்து கணேமுல்ல பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முதல் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 35 கிலோ ஹஷிஷும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 10.5 கிலோ குஷ் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐம்பது கிலோ சட்டவிரோத போதைப்பொருள் கடந்த மூன்று மாதங்களில் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவற்றில் குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.