அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முகம்மது இஸ்ஸதீன் தெரிவித்தார்.
உணவு விற்பனை நிலையங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து உணவு விற்பனை நிலையங்கள், உணவு கையாளும் நிலையங்கள், பேக்கரிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தி வருவதாகவும், அவர் கூறினார். இரவு நேரங்களிலும் விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதன்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப்பண்டங்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
உணவு தயாரிப்போர் தூய்மையை பேண வேண்டுமென்பதுடன், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவையும் தூய்மையாக இருக்க வேண்டுமெனவும் உணவகங்களில் பணியாற்றுபவர்கள் கையுறை பாவிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட திட்டங்களை மீறி பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிலையங்கள் மூடப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்