தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியாவுடனான ஈடுபாட்டை முடுக்கிவிட வேண்டும் என வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஏ.வரதராஜபெருமாள் கோரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு விருந்தகத்திலிருந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதால் மட்டும் பலன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாடு கோவையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனை கூறியுள்ளார். 1983– 1987 காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் கிளர்ச்சிக் குழுக்களும், கட்சிகளும் புதுடெல்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்திய தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்ததையும் இதன்போது, அவர் நினைவு கூர்ந்தார். 1983 மற்றும் 1990 க்கு இடையில் உரிய விடயங்களை செய்ய முடியாது போனாலும், தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்துக்கும் பொறுப்புள்ளது.
இலங்கை தமிழர் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கம், தனித்து செயல்பட முடியாது. இதற்கு இந்திய மக்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவும் தேவை. அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுக்காக இந்தியாவுக்குள் குரல் கொடுக்க வேண்டும். புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் நெருங்கிய உறவைப் பேணினால் மட்டுமே இது சாத்தியமாகும்.இதன்,முதன்மைப் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,13 ஆவது திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இவ்விடயத்தை ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் திருத்தத்தின் ‘சரியான செயல்படுத்தலை’ எவ்வாறு உறுதிப்படுத்துவது பற்றி இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.