இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தில் கோவில் யானை இராமலெட்சுமி இன்று ( 30) குதுகலமாக ஆட்டம் போட்டது.
திருக்கோவிலில் உள்ள யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நீச்சல் தடாகம் போன்ற வகையில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு அதில் யானைகள் குளிக்க வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் உள்ள இராமலெட்சுமி யானைக்காக வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் ரூ.15இலட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டது.
இதில் நவீன வசதிகளுடன் யானை குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தால் தவித்த யானையை இந்த நீச்சல் தடாகத்தில் இறக்கி விட்டு நீராட விட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆனந்தமாக ஆட்டம் போட்டு குளித்தும் கோடை வெயிலை எதிர்கொண்டு இராமலெட்சுமி யானை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது.
மன்னார் குறூப் நிருபர்