முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
வவுனிக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இந்த தங்கூசி வலைகளை தாம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன், இந்த வலைகளை பயன்படுத்திய உரிய கடற்றொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, நன்னீர் மீன்களும் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், தங்கூசி வலைகளை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
கிளிநொச்சி குறூப் நிருபர்