பிலியந்தல பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவரை தாக்கியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைத்து தாக்கும் போது பிரதான சந்தேக நபரின் மகனொருவர், கைத்தொலைபேசியில் அதனை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களான தம்பதிகளின் புதல்வர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படவுள்ளனர்.பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு கான்ஸ்டபிள்கள் இருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கான்ஸ்டபிள்கள் இருவரும் கடந்த 25 ஆம் திகதி இரவு போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை, கெஸ்பாவ பகுதியிலிருந்து வந்த சிறிய ரக லொறியொன்று மொறட்டுவ பகுதிக்கு திருப்பும் போது நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டது. லொறி சாரதி, அவர்களை நோக்கி லொறியைத் திருப்பி அவர்கள் மீது மோதுவதற்கு முயற்சி செய்து தப்பியோடியுள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் லொறியின் பின்னால் துரத்திச் சென்று நிறுத்துமாறு கூறியும் நிறுத்தாது பயணித்துள்ளனர்.
பின்னர் லொறி வண்டி பட்டுவன்தர பாதையின் ஊடாக கஹதுடுவ ஹெரலியாவல பிரதேசத்து வீடொன்றின் முன்னால் பாதையில் நிறுத்தப்பட்டது. லொறியின் சாரதி மற்றும் அவருடன் இருந்த நபரும் வீட்டுக்குளிருந்து தடியுடன் வந்த பெண் உள்ளிட்ட பலர்,அவர்களை சுற்றி வளைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.