இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மக்களின் சார்பாக இலங்கையின் இரண்டாவது வீதி நூலகம் நேற்று முன்தினம் (05) கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் இந்நூலகத்தில் காணப்படும்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் பர்கி மற்றும் கண்டி மாநகர சபையின் ஆணையாளர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி நூலகத்தை ஆரம்பித்ததுடன் அதனைத் தொடர்ந்து நூலக நிர்வாகத்தின் ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.
கண்டி சிட்டி சென்டருக்கு அருகிலுள்ள சஹாஸ் உயனவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பொதுப் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தை அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம்.
“வீதி நூலகம் ” என்ற திட்டத்தின் கீழ், இந்நூலகத்தில் கட்டடம் மற்றும் புத்தகங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நூலகம் மற்ற நூலகங்களை விட வித்தியாசமானது. “புத்தகம் ஒன்றை வைத்து விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்தல் ” என்ற அடிப்படையில் இந்நூலகம் செயல்படும்.
இங்கே நூலகர் என்று யாரும் இல்லை. யாரும் இங்கு வந்து புத்தகங்களைப் படிக்கலாம். மேலும், வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் விருப்பப்படி வேறு புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
“சுதந்திர சிந்தனை போக்குடைய மற்றும் சிறந்த மனப்பான்மை கொண்ட மனித சமுதாயத்தால் மட்டுமே உலகில் பொங்கி எழும் வன்முறையினை தணிக்க முடியும்” என்று பாகிஸ்தான் அரசு நம்பிக்கை கொள்கிறது.
எனவே, எமது இத்திட்டத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு நூலகத்தை நிர்மாணிப்பதற்குத் தகுந்த இடத்தையும், பூரண ஒத்துழைப்பையும் வழங்கியமைக்கு எமது நாட்டின் சார்பாக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.