UPDATE – தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாய்வானின் கிழக்கு பகுதியில் இன்று (03) காலை 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாய்வான் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்வான் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் திருத்தியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்வானில் இவ்வாறு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்வானில் 1999 ஆம் ஆண்டு 7.6 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் 2400 பேர் உயிரிழந்ததோடு, 5000 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தாய்வானின் கிழக்கு நகரமான Hualien இல் கட்டிடங்கள் அசைந்தது குறித்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தைபேயில் சுரங்கப்பாதை சேவையும், தீவு முழுவதும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கத்தால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுவதுள்ள நிலையில் மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.