ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் விமான நிலையத்தை வரி செலுத்தும் மக்களுக்கு சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான, பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரின் கேள்விக்கான வேளையிலேயே, ஹேஷா விதானகே எம்பி இக்கேள்வியை எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பயிற்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்தல், மிக அத்தியாவசியமான ஆட்சேர்ப்பை மட்டும் மேற்கொள்ளல் , அனாவசிய கொள்வனவுகளை மட்டுப்படுத்தல், சம்பளத் திருத்தம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் ஆகியவற்றை நிறுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அரசாங்க வங்கிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவுள்ள கடன் தொடர்பில், தெளிவுபடுத்துமாறு ஹேஷா விதானகே எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்:
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமானது 2024 மார்ச் 31 க்கு வரையான காலப்பகுதியில் அரச வங்கிகளுக்கு 385.12 மில்லியன் டொலர் வழங்கப்பட வேண்டியுள்ளது
இலங்கை வங்கிக்கு 217.42 மில்லியன் டொலரும் மக்கள் வங்கிக்கு 167. 71 மில்லியன் டொலரும் இவ்வாறு கடனாக வழங்க வேண்டியுள்ளது. எனினும் 2024 மார்ச் 31 வரை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)