நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுமானால், சர்வதேச கண்காணிப்பு மிக மிக அவசியமென, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான சர்வதேச கண்காணிப்பு இருந்தால் மட்டுமே,நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் உருவாகும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்திப்பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட. நல்லிணக்க ஆணைக்குழுக்கள் பயனற்றுப் போயின.மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதனை நாம் முற்று முழுதாக எதிர்க்கிறோம்.
நாட்டின் தற்போதைய நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை இலக்காகக் கொண்ட செயற்பாடா என்ற சந்தேகம் எழுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வெளிவிவகார அமைச்சர் எடுக்கும் முயற்சி, சாத்தியமானதாக அமையுமா? என்பது ஒருபுறமிருக்க அதனை நாம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பே இது, தொடர்பான விசாரணைகள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச கண்காணிப்போடு இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதை நாம் முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறோம்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)