வெளிநாட்டிலுள்ள கூலிப்படைகளில் இலங்கை படைவீரர்கள் சிலர் இணைவதாக அண்மைக்கால தகவல்கள் மூலம் தமக்கு தெரியவந்துள்ளதுடன், இந்த ஆபத்தான நிலைமைக்கு ஆளாக வேண்டாமென்று தமது படைவீரர்களை கேட்டுக்கொள்வதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டின் படைவீரர்களாகிய நாம், எமது தாய்நாட்டின் மீதான ஆழ்ந்த பற்றுமிக்க உணர்வு மற்றும் மரியாதைக்காக பணியாற்ற கட்டுப்பட்டுள்ளோம். இந்நிலையில் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்து வெற்றிமிக்க இராணுவ வீரர்களாக விளங்குகின்ற நாம், எமது தொழிலின் மூலம் நேர்மை மற்றும் மரியாதையை நிலை நாட்ட வேண்டும்.
எமது சேவைக்காலத்தில் எமது நாட்டுக்காக செய்த தியாகங்களை மறந்துவிடக் கூடாது. நாம் பல கஷ்டங்களை சந்தித்துள்ளோம். எமது வீரமானது தனிப்பட்ட இலாபத்துக்காக விற்கப்படும் ஒன்றல்ல. எமது தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பாகும். ஆகையால் படைவீரர்களாகிய நீங்கள் உங்களது மரியாதை மற்றும் கண்ணியத்தை நிலை நாட்ட வேண்டும் என்று தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.