இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டின் முக்கியமான போட்டித் தொடரான 22ஆவது DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு, நிப்பொன் ஹோட்டலில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் DSI நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்தது. இலங்கை கரப்பந்து சங்கம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலை கரப்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் நாட்டில் முன்னணி வகிக்கும் பாதணிகள் உற்பத்தியாளரான DSI இந்த போட்டியை நடத்துகிறது.
இந்த ஆண்டு, நாடு முழுவதிலுமிருந்து 4,000 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் ஜூன் 15 தொடக்கம் ஜூலை 21 ஆம் திகதி வரை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும். தேசிய அளவிலான போட்டிகள் ஓகஸ்ட் 07 முதல் 11 வரை நடைபெறும்.
இறுதிப் போட்டிகள் நவம்பர் 02, 03 இல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து DSI காட்சியறைகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 011-2669344 எனும் இலக்கத்துடன் இலங்கை கரப்பந்து சம்மேளனத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் மே 31 ஆகும்.