Monday, May 20, 2024
Home » டயனாவின் வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தகவல்

டயனாவின் வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தகவல்

- பாராளுமன்ற செயலாளர் நாயகம் எழுத்து மூலம் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
May 9, 2024 11:28 am 0 comment

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டமையால் 9ஆவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயனா கமகே ஐ.ம.ச. கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில், அவர் பிரித்தானிய பிரஜா உரிமை கொண்டவர் என்பதால், அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு எம்.பி. பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தொடர்ப்பட்ட வழக்கின் பிரகாரம் அவரது எம்.பி. பதவி வறிதாவதாக உயர் நீதிமன்றம் நேற்று (08) அறிவித்ததைத் தொடர்ந்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

இந்நிலையில், டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது எனும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக வெற்றிடமான ஐ.ம.ச. தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்திற்கு

எம்.பி. பதவியை இழந்தார் டயனா கமகே

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT