நாட்டிற்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டிருந்த ஜெர்மன் நாட்டு பெண் ஒருவரின் பயணப் பொதி 180 யூரோ நாணயம், ஆப்பில் கையடக்க தொலைபேசி, வெளிநாட்டு பயணச் சீட்டுக்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற சிறுவர் விடுதியின் 19 வயதுடைய மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் புதிய நகரில் ஸ்ரீமன் மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஜெர்மன் நாட்டு பெண்கள் மூவரில் ஒரு பெண்ணின் பயணப்பொதி அபகரித்து தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரம் செல்வதற்கு முன்னர் திருடப்பட்ட 10,000 ரூபா பணம் 30 யூரோ நாணயத்துடன் மாணவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது பயணப் பொதி, கையடக்க தொலைபேசி, வெளிநாட்டு பயணச் சீட்டு என்பனவைகள் விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்களா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்