மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பால் எழுந்துள்ள நெருக்கடிக்கு தாம், ஒரு போதும் பதவி விலகப்போவதில்லை என,ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்ைறய தினம் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்: எனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தமை மற்றும் மீள் பரிசீலனை செய்துள்ளமை காரணமாக நான் பதவி விலகப் போவதில்லை.
இதை தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். எனது பதவி மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலே பதவி விலகுவேன்.
எனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் எனக்கு பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பையே நான் நிறைவேற்றினேன்.
எமது நிதி சபை மட்டுமன்றி தொழிற்சங்கங்களும் இணைந்தே இந்த சம்பள அதிகரிப்புக்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. மூன்று வருட ஒப்பந்த கூட்டு இணக்கப்பாட்டுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பாக எமது நிர்வாகம் மற்றும் நிதிச்சபை தீர்மானம் எடுக்கும். அது தொடர்பில் வேறு எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை.
இந்த முடிவு பணியாளர்களின் நலன் கருதி இரு தரப்பும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தீர்மானமாகும். அது தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்பதே எனது கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)