கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக குளங்கள், கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவில் தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயிர்ச்செய்கைக்காக தானியங்கள் வழங்கும் வேலைத் திட்டம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தில் நேற்று (26.03) இடம்பெற்றது.
இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குளங்களின் கீழான பயிர்ச்செய்கைக்காக கச்சான், கௌபி, பயறு, உழுந்து விதைகள் வழங்கப்பட்டன. அதில் முதல் கட்டமாக கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 9 விவசாயிகளுக்கு கௌபி பயிற் செய்கைக்காக விதைக் கௌபி வழங்கப்பட்டதுடன், பயிர்ச் செய்கை தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சனா, கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா விசேட நிருபர்