Saturday, April 27, 2024
Home » அமானா வங்கியின் கெலிஓய சுய வங்கிச் சேவை நிலையம் ஆரம்பம்

அமானா வங்கியின் கெலிஓய சுய வங்கிச் சேவை நிலையம் ஆரம்பம்

by mahesh
March 25, 2024 3:06 pm 0 comment

நாடு முழுவதிலும் இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சௌகரியமான வங்கிச் சேவைகளை அனுபவிக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அமானா வங்கியின் அர்ப்பணிப்பின் பிரகாரம், அதன் புதிய சுய வங்கிச் சேவை நிலையம் கெலிஓய பிரதேசத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல. 34/A கம்பளை வீதி, கெலிஓய எனும் முகவரியில் இந்த சுய வங்கிச் சேவை நிலையம் நிறுவப்பட்டுள்ளதுடன், அமானா வங்கியின் 61 ஆவது வாடிக்கையாளர் சேவைப் பகுதியாகவும் அமைந்துள்ளது.

வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், கண்டி கிளையின் வியாபார தலைமை அதிகாரி அசாம் அமீர், கம்பளை கிளை முகாமையாளர் மொஹமட் ஹஷீப், மாவனல்ல கிளை முகாமையாளர் – மொஹமட் ராசிக், உள்நாட்டு வியாபார பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் இந்த சுய வங்கிச் சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். வங்கியின் கம்பளை கிளையின் மேற்பார்வையின் கீழ் இந்த நிலையம் இயங்கும். கெலிஓய சுய வங்கிச் சேவை நிலையத்தினூடாக, பண மீளப் பெறல்கள், பண வைப்பு மற்றும் காசோலை வைப்பு போன்ற அனைத்து வசதிகளும் எந்நேரமும் வழங்கப்படும்.

விரிவாக்கம் தொடர்பில் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “கெலிஓயவுக்கு எமது வலையமைப்பை விஸ்தரிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கெலிஓயவில் எமது சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளோம். அதனூடாக, மக்களுக்கு நட்பான எமது வங்கியியல் மாதிரியை பொது மக்களுக்கு அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். சமூகங்களுக்கு எமது வங்கிச் சேவைகளை அதிகளவு அணுகச் செய்யும் செயற்பாடுகளுடன் பொருந்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதுடன், அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை சுலபமாகவும், சௌகரியமாகவும் மேற்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT