பரிசுத்த வாரத்தின் முக்கிய தினமாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளிக்கிழமையை அனுஷ்டிக்கின்றார்கள்.
இறையன்பின் ஊற்று மானுடத்தை வந்தடை ந்த இந்த நாள். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை நிரூபித்துக் காட்டிய நாள்.
அநியாயத் தண்டனை மரணம் சரிவு அல்ல அது சாதனைக் களம் என்பதை உணர்த்திய நாள். எனக்காக அழ வேண்டாம் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள் என்னும் தன்ணுணர்வுத் தேடலை ஆரம்பிக்கச் சொன்ன நாள்.
இறையன்பிலிருந்து என்னைப் பிரிக்கக் கூடியது எது? என்னும் இலட்சிய வேட்கையின் வீரத்தை வெளிப்படுத்திய நாள்.
அன்னை மரியாவை சீடத்துவத்தின், பரிசாக, பாதுகாவலியாகக் கொடுத்த நாள். உலகத்தின் சிந்தனைக் கருவூலங்களைச் சிதறடித்து அவமானத் தின் சின்னமாம் சிலுவையை, மீட்பின் வழித்தடமாக மாற்றிய சரித்திர நாள்.
பாவக் கறையைக் கழுவித் துடைத்த தூய நாள். இறையரசுக்காய் அடையும் அவமானங்கள் ஆற்றல் மிக்க சக்திகளே என்பதை அடையாளப்படுத்திய நாள். பொறுமைக்கும் எல்லையுண்டு என்னும் மனித சிந்தனையை மாற்றிப்போட்டு, பொறுமையே பொறுமையின் எல்லை என்பதை புரியவைத்த நாள். விரக்தியை விரட்டு விசுவாசப் புத்தகத்தைப் புரட்டிப்படி என்னும் யதார்த்தத்தை விதைத்த நாள். அநீதியின் வேர்கள் அறித்தெறியப்படும் என்னும் எச்சரிக்கையைப் பறைசாற்றிய நாள். உண்மைகள் உலர்ந்து போவதுமில்லை, ஊனமாகிப் போய்விடுவதுமில்லை என்னும் உண்மை கருவாகி, உருவான நாள். வெறுமையே அருள் நிறைவுக்கான திறவுகோல் என்பதை அர்த்தப்படுத்திய நாள்.
மன்னிப்பே மானுடத்தின் சுவாசம் என்பதை சொன்ன நாள். எல்லாவற்றையும் கடந்து: நேசத்தின் வாசம் நம்மைத் தழுவிய நாள்.
எனவே, சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்காமல், நம் ஆண்டவர் யேசுவின் பாடுகளை நினைவூட்டும் இந்தத் தூய வெள்ளிக்கிழமையின் ஆன்மிகக் கருவூலங்களை நன்கு உள்வாங்கியவர்களாக, தூய்மையான அன்பை வாழ்ந்து, பகிர்ந்து இயேசுவின் சீடர்களாக மாறுவோம்.