இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 04.39 மணி வரை சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை நேரப்படி பகலில் இச் சந்திரகிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்களால் அதனை காண முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், தெற்கு நார்வே, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும்.