கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்து சம்பவம் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (10) இரவு 10.30 மணியளவில் நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் ஹைபொரஸ்ட் இலக்கம் இரண்டு குருந்து ஒயா தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது நுவரெலியாவிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் மோதி இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த விபத்து சம்பவத்தில் ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தில் வசிக்கும் வீரையா காந்தி எனும் (50) வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாந்தியை ஹைபொரஸ்ட் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான வலப்பனை நீதவானின் விசாரணைகள் இடம்பெற்றவுடன் பிரேத பரிசோதணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார் பஸ் சாரதியை வலப்பனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்