Tuesday, April 30, 2024
Home » பெப்ரவரி மாதம் 120 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும்
உமாஓயா திட்டத்தின் கீழ்

பெப்ரவரி மாதம் 120 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும்

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ

by mahesh
January 27, 2024 8:42 am 0 comment

உமாஓயா திட்டத்தின் கீழ் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், 31 நீர்த்தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பெனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் அதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுபோதே இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே 2024ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட வரவு, செலவு திட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சுக்கு 23,413 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். இதில் நீர்த்தேக்க பராமரிப்புக்காக 6,913 மில்லியன் ரூபாவும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 16,500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு உள்நாட்டு நிதியாக 4,678 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,590 மில்லியன் ரூபா விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கால்நடை மேம்பாட்டிற்கு 930 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய மின் கட்டமைப்பில் சூரிய சக்தி மற்றும் நீர் மின்உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இதன் கீழ், நிலம், கூரைகள் மற்றும் நீரில் மிதக்கும் சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நீரில் மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 31 நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான 14 நீர்த்தேக்கங்களிலிருந்து 2,524 மெகாவோட் மின்சாரத்தையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 17 நீர்த்தேக்கங்களிலிருந்து 553 மெகாவோட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மின்சார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT