தை பிறந்தால் வழி பிறக்கும், தடைகள் தகரும். இந்த பொங்கல் இலங்கைவாழ் மக்களின் வாழ்கையில் புதிய மாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
”பொங்கல் திருநாள் என்பது தமிழ் பண்பாட்டின் அடையாளமாகும். உழவர்கள் திருநாளாக பொங்கல் உள்ளது. அதற்கு மறுநாள் கால்நடைகளை கௌரவிக்கிறோம். தமிழ் மக்கள் உயிர்நேயவாதிகள் என்பதையே உலகிற்கு இந்த பொங்கல் திருநாள் எடுத்துரைக்கிறது.
எமது வாழ்வியலிலும் உணவுத் தேவையிலும் பெரும் பகுதியை வழங்கும் கால்நடைகளை கௌரவிக்கும் ஒரு திருநாளாகவும் இது உள்ளது. அத்துடன், சமாதானத்தையும் உயிர் சமத்துவத்தையும் போதிக்கும் பொங்கல் நன்நாளில் நாமும் எமது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வோம்.
உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றும் சுப்பையா ஆனந்தகுமார், தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.