பங்களாதேஷ் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தொடராக நான்காவது தடவையாகவும் வெற்றிபெற்று பதவியேற்றுள்ள ஷேக் ஹசீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ‘X’ தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, தேர்தலை வெற்றிகரமாக நடாத்திய பிரதமருக்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பங்களாதேஷ்த்துடனான ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதிலும் மக்களை மையப்படுத்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் கூடுதல் அக்கரை கொண்டுள்ளோம்’ என்றுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷ் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷேக் ஹசீனா, தமது பதவியேற்பின் போது, பங்காளதேஷுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பிணைப்பை எடுத்துரைத்ததோடு வரலாற்றின் முக்கியமான தருணங்களில் இந்தியா பங்களாதேஷை ஆதரிப்பதில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. அதனையிட்டு இந்தியாவுக்கு அவர் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பங்களாதேஷ் மக்களுக்கு சேவை செய்வதில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அவர், தனக்கு வாக்களித்த மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பொறுப்பையும் எடுத்துக்கூறியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில், பொருளாதார முன்னேற்றம் குறித்தும் நாங்கள் தொடங்கிய அனைத்து வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் நாம் அறிவித்துள்ளோம். மக்களினதும் நாட்டினதும் முன்னேற்றமே எங்களது முக்கிய நோக்கம்’ என்றும் ஷேக் ஹசீனா மேலும் கூறியுள்ளார்.