கொழும்பு 12, வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள மாட்டிஸ் லேனில் அமைந்துள்ள மரணித்தவரின் வீட்டில் நேற்றிரவு (11) இடம்பெற்ற இக்கொலையானது வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள பாதாள குழுவைச் சேர்ந்த ‘கெசல்வத்தை தனுக’ என்பவருடன் தொடர்புடைய சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்ற கொலையின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ‘பொடி கவி’ என அழைக்கப்படும் காவிந்த டில்ஷான் என்பவரைக் கொல்வதற்கு குறித்த நபர் தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்டவர் இதற்கு முன்னர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸ் குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.