குவைத் நாட்டின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் பதில் உள் துறை அமைச்சருமான ஷெய்க் பஹட் யூஸுப் அல் சபாவை குவைத்துக்கான இந்தியத் தூதுவர் ஆதர்ஷ் ஸ்வைகா பெரிதும் பாராட்டியுள்ளார்.
குவைத் பிரதிப் பிரதமரின் பதவிக் காலத்தில் குவைத்திலுள்ள வெளிநாட்டினருக்கு சினேகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சேவைகள் மற்றும் இந்திய சமூகத்தினரின் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டியே அவர், பிரதிப் பிரதமரை நேரில் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, குவைத்திலுள்ள இந்திய தூதரகம் தமது ‘எக்ஸ்’ தளத்தில், தூதுவர் ஆதர்ஷ் ஸ்வைகா, குவைத்தின் பிரதிப் பிரதமரும் எண்ணெய் வள அமைச்சருமான இமாத் முகம்மது அப்துல்லாஸீஸ் அல்-அட்டீகியை ஏற்கனவே சந்தித்து ஹைட்ரோ கார்பன் துறையில் இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையில் காணப்படும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடி உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தியாவும் குவைத்தும் வரலாற்று ரீதியில் மிகவும் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன. குவைத்தில் சுமார் பத்து இலட்சம் இந்தியர்கள் உள்ளனர். மத்திய கிழக்கில் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளியாக விளங்கும் குவைத், இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய நாடாகவும் உள்ளது என்றும் அந்த எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பத்து வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக விளங்கும் குவைத்துக்கு உணவுப் பொருட்கள், தானியங்கள், உடுதுணிகள், மின் மற்றும் பொறியியல் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாகனங்கள், டயர்கள், இரசாயனங்கள், தங்க நகைகள் ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், உலோகப் பொருட்கள், இரும்பு உள்ளிட்ட பல பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதாக ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.