முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது.
நேற்று (10) அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது.
பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எவ்வாறு குறித்த தீ ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.
குறித்த தீ விபத்தின்போது அருகில் உள்ள இரண்டு கடைகளும் தெய்வாதீனமாக எந்த சேதங்களும் இன்றி தப்பியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போது பாரிய சொத்தழிவுகள் ஏற்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு இல்லாதது ஒரு பாரிய குறையாக காணப்படுவதாகவும் ,தீயணைப்பு படையினர் வருகை தந்திருந்தால் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல பொருட்களை காப்பாற்றியிருக்க முடியும்.
ஆகவே மிக விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமந்தை விஷேட நிருபர்