திவ்விய நற்கருணையில் இயேசுவை வணங்கி ஆராதிப்பது என்பது வெறுமனே நேரத்தை வீணாக்குவதல்ல என்றும் மாறாக நேரத்திற்கான அர்த்தத்தை வழங்குவது என்றும், இதயத்திற்கு ஊட்டமளிக்கும் எளிமையான அமைதியில் வாழ்வின் பாதையைக் கண்டறிவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஜனவரி 6ஆம் திகதி சனிக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெஸ்லிகா வளாகத்தில் குழுமியிருந்த சுமார் 40,000 திருப்பயணிகளுக்கு திருக்காட்சிப் பெருவிழாவில் வழங்கிய மூவேளை செப உரையின்போதே திருத்தந்தை இவ்வாறு தெரிவித்தார்.
ஞானியர் குழந்தை இயேசுவைக் கண்டது போல நாமும் நம்பிக்கை, ஆச்சர்யம், ஆர்வம், கொண்டு குழந்தை இயேசுவைக் காண வேண்டும் என்றும், கடவுள் எளிய குழந்தையாக அன்பானவராக நமக்காக பிறந்தார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தை இயேசுவின் முன் நின்று அவரைப் போல எளியவராகவும் நம்பிக்கை உடையவராகவும் அவரது ஆச்சர்யமான வாழ்வை நாம் வாழ அருள்வேண்டுவோம் என்றும் இதனால் உலகின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முன்னோக்குகளை நம்மால் பெற முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுளின் தாயும் நமது தாயுமான அன்னை மரியாள், குழந்தை இயேசுவின் மீதும், எல்லாக் குழந்தைகளின் மீதும், குறிப்பாகப் போர்கள் மற்றும் அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நமது அன்பை அதிகரிக்க உதவட்டும் என்று கூறி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
மெரினா ராஜ்