சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்துக்கு முன் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய விஜயத்தை இலக்காகக் கருதி, கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களிடம் இருந்து கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.
இம்மகஜர், சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டது.
(யாழ். விசேட நிருபர்)