நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவுகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராம அதிகாரிகள் நியமனத்தில் இரண்டு சிறுபான்மையினர் உள்ளிட்ட எழுபத்து மூன்று பேர் களுத்துறை நிர்வாக மாவட்டத்தில் பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் கிராம அதிகாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
களுத்துறை நிர்வாக மாவட்டத்தில் பேருவளை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து எட்டுப் பேர் கிராம அதிகாரி பதவிக்கு தெரிவாகியுள்ளதுடன் அதில் இரண்டு முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும். எம்.எச்.பாத்திமா ஹஸ்லா மற்றும் எம்.எச். பாத்திமா சுனா ஆகிய இருவருமே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தின் பாணந்துறை-5, பண்டாரகம-3, ஹொரண-4, இங்கிரிய-1, புளத்சிங்கள-4, மில்லனிய-1, களுத்துறை-26, பேருவளை-8, தொடங்கொட- 2, மதுகம-6, பாலிந்தநுவர-3, அகலவத்த-3 மற்றும் வலல்லாவிட்ட-7 என்றவாறு பிரதேச செயலகப் பிரிவுகளில் புதிய கிராம அதிகாரிகள் தெரிவாகியுள்ளனர்.
கிராம அதிகாரிகளை ஆட்சேர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)