சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களின் சீருடைகளை தைப்பதற்கான புதிய ஆடைத் தையல் தொழிற்சாலை ஒன்று வில்பத்துவ மஹா விலாச்சிய பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியான்வில இந்த ஆடைத் தொழிற்சாலையை அண்மையில் திறந்து வைத்தார். இதன் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.டபிள்யூ.பி. சுதர்சன மற்றும் திணைக்கள பணிப்பாளர் குழுவினரும் இதில் கலந்து கொண்டனர்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வில்பத்து படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ரசிக குமாரவின் அழைப்பின் பேரில் பணிப்பாளர் நாயகம் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், ஆடைத்தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியுடன் இணைந்து, சேவா வனிதா பிரிவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் தந்திரிமலை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படைவீரர் ஒருவருக்கு வீடும், 16 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் விநியோகம், 30 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தாருக்கு உலர் உணவு பொட்டலங்கள் விநியோகமும் இங்கு இடம் பெற்றன.
திறப்பனை தினகரன் நிருபர்