Saturday, April 27, 2024
Home » தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் பயிற்சிப்பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் பயிற்சிப்பட்டறை

by damith
October 16, 2023 12:04 pm 0 comment

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பால்நிலை சமநிலை மற்றும் ஒப்புரவு நிலையமும், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமநிலை மற்றும் ஒப்புரவு நிலையமும் கூட்டாக இணைந்து பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் (Training of Trainers) ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் மேம்பாட்டு நிலையத்தில் கடந்த 22.09.2023 இல் நடத்தியுள்ளன.

இப்பயிற்சிப் பட்டறையில் ஆறு பீடங்களையும் மற்றும் நிருவாக அதிகாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் 40 பயிற்சியாளர்கள் கலந்து பயன் பெற்றனர்.

இப்பயிற்சிப் பட்டறையின் மூலம் 15 மணித்தியால நேரடிக் கற்றல், கற்பித்தல் அலகுகளை உள்ளடக்கிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வடிவமைக்கப்பட்ட ‘பன்முகத்தன்மையுடன் வாழக் கற்றுக் கொள்ளல் (Learning to Live with Diversity)’ எனும் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், குறித்த சில அலகுகளை கற்பிக்கும் முறைமைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமநிலை மற்றும் ஒப்புரவு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி முஹம்மது மஜீத் மஸ்றூபா தலைமை தாங்கி நடத்தினார். ஜனாப் M.Z. றிஸான், உதவிப்பதிவாளர் (மாணவர் நலன்புரிப் பிரிவு இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் “அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது இன்றைய காலகட்டத்தில் அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த முயற்சியில் ஒரு பெரிய நகர்வை செய்துள்ளது. குறிப்பாக இலங்கை பட்டதாரிகளுக்கு இந்த விடயத்தில் பயிற்சி அளிப்பதன் காரணமாக பிறமதங்கள், மொழிகள், இனங்கள்/ இனக்குழுக்கள் மற்றும் பாலினங்களை மதிக்கின்ற கலாசாரம் மற்றும் மனநிலையை உருவாக்க இது வழிவகுக்கும். இவர்கள் வருங்கால சந்ததிகளை தலைமை தாங்குபவர்கள். இப்பயிற்சித் திட்டம் எதிர்கால சந்ததியினரை சாந்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினூடாக வாழ வழிசமைக்கும்” என்று கூறினார்.

பால்நிலை சமநிலை கற்கை நெறியின் இணைத்தலைவரும், பால்நிலை சமநிலை மற்றும் ஒப்புரவு நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் P. D. U. D. குணதிலக தலைமையில் பேராசிரியர் பிரபா மனுரத்ன (ஆங்கில மொழி திணைக்களம், களனிப் பல்கலைக்கழகம்), கலாநிதி துஸான் ஜெயவிக்கிரம (பீடாதிபதி, வர்த்தக முகாமைத்துவ பீடம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து பயிற்சிகளை வழங்கினர். ‘பன்முகத்தன்மையுடன் வாழக்கற்றுக் கொள்ளல்’ எனும் பாடத்திட்டத்தை இவர்கள்தான் வடிவமைத்தனர்.

இந்நிகழ்வில் கலாநிதி சபீனா M. G. ஹஸ்ஸாலி (பீடாதிபதி, வர்த்தக முகாமைத்துவ பீடம்), பேராசிரியர் சல்பியா உம்மா (பணிப்பாளர், ஊழியர் அபிவிருத்தி நிலையம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் (கலாநிதி) A. ஜஹ்பர் (பணிப்பாளர், தர உத்தரவாதத்திற்கான நிலையம் மற்றும் பதில் பதிவாளர்), M. I. நவ்பர் (பதில் நிதியாளர்), மங்கள வன்னியாராச்சி, பேராசிரியர் A.L. றவுப் மற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பி.எம்.எம்.ஏ.காதர் (மருதமுனை தினகரன் நிருபர்-)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT