துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில்உள்ள கல்வி முறைமை நாட்டுக்குத் தேவையான நல்ல தலைமைத்துவங்களை உருவாக்கத் தவறிவிட்டது. அதனை சீர் செய்ய வேண்டியது ஆசிரியருடைய கடமையாகும் .
இவ்வாறு கல்முனையில் நேற்றுமுன்தினம்(21) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் தெரிவித்தார் .
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து அக்சன் யூனிட்டி லங்கா( AU Lanka) அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோயில் ஆகிய கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் கற்பித்தல் அணுகுமுறை செயலமர்வை நடத்தியது.
ஏயூ லங்கா நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர் கே.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மாந்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா பிரதி அதிபர் பா. சந்திரேஸ்வரன் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
கௌரவ அதிதிகளாக எயூ லங்கா நிறுவனத்தின் கல்வி இணைப்பாளர் கே.சதீஸ்குமார், திட்ட முகாமையாளர் வி.சுதர்சன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்கள் தங்களது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக கற்கின்ற ஆசிரியரே சிறந்த ஆசிரியர் .
ஒரு ஆசிரியனுக்கு கிடைக்க கூடிய பெரிய அதிசயம் என்னவென்றால் அவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளின் உள்ளத்தை தொட வேண்டும் .அதுவே அவனது மிகப்பெரிய அதிசயமாகும். மேலும் பாடசாலைகளிலே தலைமைத்துவம் உருவாக வேண்டும்” என்றார்.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோயில் ஆகிய வலயங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 ஆரம்பநெறி ஆசிரியர்கள் இரண்டு நாள் கற்பித்தல் கற்றல் அணுகுமுறை செயலமர்வில் பங்குபற்றுகின்றனர்.
காரைதீவு குறூப் நிருபர்…?