வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வாழும்கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார். அவர் தனது வருகையை உறுதி செய்துள்ளதாக சீதைம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“நானும் எங்களுடைய ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கடந்த மாதம் இந்தியாவின் பெங்களுர் நகருக்கு விஜயம் செய்து வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை அவருடைய ஆசிரமத்தில் சந்தித்து எங்களுடைய ஆலய கும்பாபிஷேக நிக்ழவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினோம்.
குருஜி எமது அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய வருகையை மிகவிரைவில் உறுதிப்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.அதற்கமைய அவர் தற்பொழுது தான் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார். எனவே நாம் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.
குருஜி 18 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்து அங்கிருந்து அன்று மாலை நுவரெலியாவுக்குச் சென்று ஆலயத்தின் என்ணெய்க்காப்பு நிகழ்விலும் கலந்து கொள்கின்றார். அதனைத் தொடர்ந்து மறுநாள் நடபெறுகின்ற மஹாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்கின்றார். கும்பாபிஷேக நிகழ்வில் கோய்ம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதியும் கலந்து கொள்கின்றார்.
அத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற பல முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள்”.
இவ்வாறு இராதாகிருஷ்ணன் எம்.பி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பான விரிவான ஊடக சந்திப்பு நேற்று 07.05.2024 மாலை 2.00 மணியளவில் வெள்ளவத்தை மயூரபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இதன்போது அனைத்து விடயங்களும் ஊடகவியலாளர்களுக்கு விரிவாக அறிவிக்கப்பட்டன.
எஸ். தியாகு
(நுவரெலியா நிருபர்)