வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீத்தாஎலிய அருள்மிகு சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன் 18 ஆம் திகதி எண்ணெய் காப்பு நிகழ்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கைக்கு வருகை தருவதாகவும் சீதைம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.
ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கடந்த மாதம் பெங்களுர் நகருக்கு விஜயம் செய்து வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை ஆசிரமத்தில் சந்தித்து எங்களுடைய ஆலய கும்பாபிஷேக நிக்ழவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினோம்.
குருஜி அழைப்பிதழை பெற்றுக் கொண்டு தன்னுடைய வருகையை மிகவிரைவில் உறுதிப்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய அவர் தற்பொழுது தான் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.எனவே நாம் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம் என்றார்.
தெஹிவளை, கல்கிஸ்ச விசேட நிருபர்