தனியார் நிறுவனத்தின் காசோலைகள் மூலம் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கும் எதிரான விசாரணையை விரைவில் நிறைவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு
ரூ. 20 மில். பெறுமதியான காசோலை…
திணைக்களத்திடம் கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் கோசல சேனாதீர நேற்று தெரிவித்தார்.
2023 இல் உள்ளூராட்சிமன்ற வேட்பாளராக தோற்றியதாக கூறப்படும் சந்தேகநபர்களான கருப்பையா மோகன சுந்தரம், அவரது மனைவி நவரத்ன ராசா ஹன்சபிரியா மற்றும் அருண் டி நாதன் அனோஷன் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். சம்பவம் தொடர்பாக மேலும் பல சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், விசாரணை நிறைவடையவில்லையென்று நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
நுகேகொடையிலுள்ள பிரபல கட்டுமான நிறுவனமொன்றின் (Blue Ocean Resident Pvt. Company) பிரதம கட்டடக்கலைஞர், பொறியியலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக 2018 இல் உரிமையாளர் சிவராஜா துமிழன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களாக ஏன் விசாரணை முடிக்கப்படவில்லையென்று வினவிய நீதவான், விசாரணையை உடனடியாக முடித்து உண்மைகளை முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.
தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நிறுவனம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதியின் சட்டத்தரணி அஜித் பி.பத்திரன ஆஜராகியிருந்தார்.
இரு தரப்பையும் பரிசீலித்த மாஜிஸ்திரேட், ஜனவரி 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவித்தார்.