தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்ப தொழில் முயற்சிகளை ஊக்குவித்தலுக்காக புதிய தொழில்நுட்பம் தொடர்பாக அறிவை பெற்றுக்கொடுத்தல், திறன் விருத்தி, தொழில் ஆலோசனைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மேல் மாகாணத்தில் (சாதாரணதர மற்றும் உயர்தர) பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்கள், தொழில் தேடுவோர், தொழில் முனைவோர் ஆகியோருக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
மூன்று தினங்களாக நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் போது, தொழிற்சாலைகள் மற்றும் தொழில் ஆலோசனை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான களம் அமைத்துக்கொடுக்கப்படுவதுடன், தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தினால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வொன்றும் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (22) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றதுடன், தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக சம்பத் கீகியனகே, தேசிய எதிர்காலத்துக்கான திறன் வலுவூட்டல் நிறுவனத்தின் தலைவர் மது ரத்நாயக்க, மென்பொருள் சேவை நிறுவனம் மற்றும் இலங்கை கூட்டு நிறுவனம் (SLASSCOM) தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.