மட்டக்களப்பு மாநகரத்தில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்துக்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றை தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயற்பட்ட போது அரசியல், இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்த நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும், உலகமயமாக்கல், எதிர்கால சந்ததியின் நவீன சிந்தனைகள் போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்வாதார நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளைக் கொண்ட முழுமையான நூலகமொன்றை மட்டக்களப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுநல நோக்கும், முற்போக்கு சிந்தனையும், ஆற்றலும், அனுபவமும் கொண்ட புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
நூலகத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சில புத்திஜீவிகள் தாமாக முன் வந்ததன் அடிப்படையில் தலைவர் செயலாளர் ஆலோசகர்கள் உள்ளடங்கலாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே கிழக்கு மாகாணத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் வளர்ச்சி மீது அக்கறையும் கரிசனையும் கொண்டவர்கள் இவ்வாறானதொரு புத்தகசாலையை எமது மண்ணில் அமைப்பதற்கு ஒத்துழைப்புடனும், பரஸ்பர நம்பிக்கையுடனும் செயற்பட வேண்டும்.
அத்துடன் பொதுமக்களால் வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் அவர்களின் பெயர்பட்டியல்களுடன் இணைத்து நூலக திறப்பு விழாவின் போது காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குழுவின் தலைவராக திரு. மு. பவளகாந்தன், செயலாளராக திரு. சா. பரணீதரன் போன்றோரும் ஆலோசகர்களாக ஸ்டாலின் ஞானம், என். செல்வராஜா போன்றோரும் அங்கத்தவர்களாக கலாநிதி. து. பிரதீபன், ம. பிரகாஷ், பா. டயல் சிங்கம், ம. பவித்திரன், ஜோயல் ஜெருசன், ஜோ.லிபியன், கி. நவநீதன், டி. ஜனோபன், பொ. குவேதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.