Monday, May 20, 2024
Home » ஏமாற வேண்டாம்; ரஷ்ய போர் முனையில், உங்கள் கனவுகளை புதைக்க ஒரு கடத்தல் கும்பல் செயல்படுகிறது

ஏமாற வேண்டாம்; ரஷ்ய போர் முனையில், உங்கள் கனவுகளை புதைக்க ஒரு கடத்தல் கும்பல் செயல்படுகிறது

by mahesh
May 8, 2024 9:00 am 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட

1. குழுவினரை அனுப்புவது யுத்தம் செய்யவல்ல, பலி கொடுக்க…

2. ஒரு சுயாதீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு சுயாதீன நாட்டின் தேசிய ராணுவத்தில் சேர சட்டபூர்வ அனுமதி இல்லை

3. ரஷ்ய உக்ரேனிய எல்லைகளில் இப்போது பலர் அவதிப்படுகின்றனர்.

3. கிடைக்கப்பெறும் செய்திகளின்படி, கணிசமானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

ரஷ்ய – உக்ரைன் போர் முனையில் இராணுவ உதவியாளர்களாக வேலை பெற்றுத் தருவதாகவும், அந்த வேலைகளுக்கு இலட்சக்கணக்கான ரூபா சம்பளம் பெற்றுத் தருவதாகவும் மக்களை ஏமாற்றி மனித கடத்தல் நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டி யுள்ளார். மனித கடத்தல் மற்றும் அதன் அடிப்படை விடயங்கள் குறித்து அவருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்.

இந்நாட்டிலுள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முனைகளுக்கு கடத்துவதாக இந் நாட்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்த வெளிப்பாட்டின் பின்னணியில் உங்கள் பங்களிப்பு தெரிகிறது. உண்மையில், ரஷ்ய மற்றும் உக்ரேனிய போர் முனைகளுக்கு இலங்கையர்கள் கடத்தப்பட்டதன் உண்மை பின்னணி என்ன?

தற்போது, ​​ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் போரின் தொடக்கத்தில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போராக இருந்தாலும், பின்னர் பல்வேறு கூலிப்படையினரும், தொழிலாளர்களும் இந்தப் போரில் ஈடுபட்டனர். எப்படியிருந்தாலும், தொழில்முறை கூலிப்படையினர் ரஷ்ய இராணுவத்துடன் வேலை செய்கிறார்கள். சமீபத்தில், ரஷ்யாவில் கூலிப்படை கிளர்ச்சி பற்றி அதிகம் பேசப்பட்டது. எனவே, இத்தகைய தொழில்முறை கூலிப்படை குழுக்கள் ரஷ்ய முனைகளில் செயல்படுகின்றன. அவர்கள் ரஷ்ய இராணுவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்ல. இருப்பினும், போருக்காக வேலை செய்யும் குழுக்கள் ரஷ்யாவிற்கு மட்டுமே என்று நான் கூறவில்லை, அத்தகைய குழுக்கள் உக்ரைனுடனும் வேலை செய்கின்றன. இந்தப் போர் முனைகளுக்குச் செல்லும் மக்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே எமது மக்கள் இந்தப் போர்முனையில் இணைய தயாராக உள்ளனர்.

இப்படி போர்முனைக்கு அனுப்பப்படும் ஆட்களுக்கு அதிக சம்பளம் தரப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தப் போரில் ஈடுபடும் இந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று கூறி ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் அவர்கள் காட்டுவது போல. அழகாகவோ, ஆடம்பரமாகவோ இல்லை என்பது சில காலம் கழித்து உறுதியாகிறது. இந்தக் கடத்தல்காரர்கள் அழகான கனவுகளைக் காட்டி, கிடைக்கும் பணத்தைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படி ஏமாந்த பலர் தற்போது ரஷ்ய- உக்ரைன் எல்லையில் தவித்து வருகின்றனர். உண்மையில் நடப்பது என்னவென்றால், கடத்தல்காரர்கள் அப்பாவி ராணுவத்தினரை ஏமாற்றி பெருமளவு பணம் பறிக்கிறார்கள்.

இந்த கடத்தல்காரர்கள் ஒருவரிடமிருந்து உண்மையில் எவ்வளவு பணம் பெறுகிறார்கள்?

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒருவரிடம் பத்து முதல் பதினைந்து லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்கிறார்கள்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தாமாக முன்வந்து போர் முனைக்கு செல்வதில் தவறில்லை, இல்லையா?

உண்மையில் அவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கு இந்த கடத்தல்காரர்கள் வாங்கனட் கூலிப்படைக்கு அல்லது வேறு எந்த கூலிப்படைக்கும் வீரர்களை அனுப்புவதாக கூறுவதில்லை. அவர்கள் முறையான ரஷ்ய இராணுவத்திற்கு அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், இந்த வாக்குறுதி முற்றிலும் பொய்யானது. சமீபத்தில், முறையான ரஷ்ய இராணுவத்திலோ அல்லது உக்ரேனிய இராணுவத்திலோ வேலைக்கு யாரும் அனுப்பப்படவில்லை. இந்த கடத்தல்காரர்கள் இந்த மக்களை ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு ஏமாற்றப்பட்ட மக்கள் எல்லைகளின் கடுமையான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளான சம்பவங்கள் பலவற்றைப் பற்றி அறிக்கைகள் எமக்குத் தெரிவிக்கின்றன. உண்மையில், இந்த பணிகள் எந்த சட்ட அடிப்படையிலும் செயல்படவில்லை, அவை கடத்தலாக செயல்படுகின்றன.

இந்தக் கடத்தலில் முதன்மையாக ஈடுபடும் குற்றவாளிகள் யார்? அவர்களை அடையாளம் காண முடிந்ததா?

இதற்குக் காரணமானவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இந்த நடவடிக்கைகளில் முதன்மையாக ஈடுபட்ட பல ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், ஆட்களை மரணத்துக்கு அனுப்பும் இந்தக் கடத்தல்காரர்களின் விபரங்களை அடையாளம் காண முடியும்.

ஒரு நாட்டின் ராணுவத்துக்கு ராணுவ வீரர்களை அனுப்ப சட்ட ரீதியான முறை இல்லையா ?

ஒரு சுயாதீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு சுயாதீன நாட்டின் தேசிய ராணுவத்தில் சேர சட்டப்பூர்வ அனுமதி இல்லை, அவ்வாறு செய்ய , இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருக்க வேண்டும். ஹைட்டி உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் போர் முயற்சிகளுக்கு நமது படைகள் இவ்வாறுதான் அனுப்பப்படுகின்றன. இருப்பினும், இன்று நாம் பேசும் ரஷ்ய போர் முனைக்கு மக்களை அனுப்புவதில் அத்தகைய சட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை. இந்த செயல்முறை ஒரு மோசடி மட்டுமே, இது முற்றிலும் சட்ட கட்டமைப்பிற்கு வெளியே உள்ளது.

நாட்டின் குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக இருந்தபோதும், ​​அறுநூறுக்கும் மேற்பட்டோர் ரஷ்ய, உக்ரைன் போர் முனைகளுக்குச் சென்றது எப்படி?

இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதால் இதற்குக் குடிவரவுத் திணைக்களம் பொறுப்பு என நிச்சயமாக நான் குற்றஞ்சாட்டவில்லை. டூரிஸ்ட் விசாவில் நாட்டை விட்டு வெளியேறும்போது இப்படி ஒரு செயலைச் செய்யப் போகிறார் என்ற சந்தேகமில்லை. இவற்றை மனித கடத்தல் என அடையாளம் காணும்போது, ​​நடக்க வேண்டிய அனைத்தும் நடந்து முடிந்து விடுகிறது.

இந்த வழியில், ரஷ்ய மற்றும் உக்ரேனிய போர்க்களங்களுக்கு அனுப்பப்பட்டவர்களிடமிருந்து என்ன சேவைகள் பெறப்படுகின்றன?

இந்த மக்கள் இராணுவ உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மிகத் தீவிரமாகப் போராடும் முனைகளில் போரை முன்னெடுத்துச் செல்வதுதான் இவர்களிடமிருந்து பெறக்கூடிய ஒரே சேவை. சொல்லப்போனால், கிராமத்து மொழியில் சொல்வதென்றால், இவர்கள் சண்டைக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல, பலி கொடுக்கவே அனுப்பப்பட்டவர்கள்.

இந்த உண்மைகளை எப்படி சரியாக கண்டுபிடித்தீர்கள்?

இவ்வாறு போர் முனைக்கு அனுப்பப்பட்டவர்களில் இருவர் தப்பித்து வந்து இந்த உண்மைகளை முதலில் தெரிவித்தனர்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்?

ஊடகங்களுக்கு இங்கு பெரும் பொறுப்புள்ளது. எவ்வளவுதான் மக்களுக்கு கூறினாலும் அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் பயனில்லை. எனவே, செய்தித்தாள்கள், இலத்திரனியல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் இது தொடர்பில் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு உள்ளது. மக்களை அறிவுறுத்துவதில் முன்னணியில் உள்ள உங்கள் நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

நான் முன்பு கூறியது போல், சுற்றுலா விசாவில் செல்பவர்கள் மீது கவனம் செலுத்துவது கடினம். ஆனால் அரசாங்கத்தால் இந்த சம்பவத்தின் ஆணிவேரை அறிந்து விசாரணை நடத்தி பாதிப்புக்கு உள்ளான போர்முனையில் உள்ள இலங்கையர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த துயரமான சம்பவத்தை தடுக்க முடியும்.

ரஷ்ய அல்லது உக்ரைன் தூதரகங்களோ அல்லது இரு நாட்டு அரசாங்கங்களுக்கோ இது தெரியுமா? இதைப் பற்றி அவர்கள் என்ன வகையான கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்?

ரஷ்ய தூதரகமும் இந்த நிகழ்வுகளுக்கு எந்த தொடர்பும் அல்லது விழிப்புணர்வும் இல்லை என்று கூறியுள்ளது. சர்வதேச மரபுகளுக்கு கட்டுப்பட்ட இந்த நாடுகள் சர்வதேச தரத்திற்கு புறம்பாக செயல்படும் என்று எண்ண முடியாது. ஆனால், இன்றைய நிலவரப்படி, ரஷ்ய போர் முனையிலும், உக்ரைன் போர் முனையிலும் இலங்கையர்கள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான விதிகளால் இதுபோன்ற விஷயங்களைக் கட்டுப்படுத்துவது கடினமா?

தற்போதும் சட்ட விதிகள் உள்ளன. இருப்பினும், சட்டத்தை மீறி இதுபோன்ற கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளனர், மேலும் பணத்திற்காக இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் சிக்கியவர்களும் உள்ளனர்.

எனவே இவ்வாறான விடயங்களுக்கு தாங்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். உங்களை ஏமாற்ற பலர் காத்திருக்கின்றனர் எனவே ஏமாறாமல் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டம் தொடர்பான அதிகாரிகளும் இவற்றைக் கடுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடந்தால், இது போன்ற தவறான செயல்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன், இந்த நிலை இனங்காணப்பட்டவுடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி அலுவலகம் செயற்பட்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு பயணத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியுமா?

சட்டப்படி, நீங்கள் இவ் வகையான வேலைக்கு செல்ல முடியாது. ஆனால், தங்கள் சொந்த வாழ்க்கை இருந்தபோதிலும், மக்கள் தங்கள் சொந்த மற்றும் குடும்பத்தின் பொருளாதார செழுமைக்காக இதைச் செய்கிறார்கள் எனவே, சட்டங்கள் மட்டுமின்றி, சரியான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு ரஷ்ய போர்க்களத்தில் உயிர் இழப்பு கூட ஏற்பட்டுள்ளதா?

இதை நான் அதிகாரப்பூர்வமாக கூற முடியாது, ஆனால் எங்களுக்கு வரும் செய்திகளின்படி, கணிசமான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். உண்மையில், நிலைமை சோகமானது என்றே விவரிக்கப்படலாம்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்கள் எப்படி தலையிட்டு விசாரணை செய்ய ஆரம்பித்தீர்கள்?

எனது கிராமம் இரத்தினபுரி மாவட்டம். , மாவட்டத்தில் உள்ள பல நண்பர்கள் என்னிடம் இவ்வாறு நடப்பதாக கூறினார்கள் நீங்கள் தலையிடுங்கள் என்று கூறினார்கள்.

பின்னர் நான் இதைப் பற்றி ஆராய்ந்து பார்த்தேன். உண்மையில், தகவல் சரியாக இருந்தது. பின்னர் நான் ஊடகங்களுக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அறிவித்தேன். ரஷ்யப் போர் முனையில் புதைந்து போகும் நம் நாட்டு மக்களைப் பற்றி ஒரு பெரிய சமூக உரையாடலையும், இராஜதந்திர மத்தியஸ்தத்தையும் உருவாக்க முடிந்தது .

தற்போது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனமும் இதில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலைமையை நாம் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

உதித்த குணவர்தன தமிழில் ; வீ.ஆர்.வயலட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT