கடந்த இரண்டு வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் விஞ்ஞானபீட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இவர்களில் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 8 ஆயிரத்து 925 ஆகும். இது வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 24 சதவீதமாகுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் எழுபது வீதமானவர்கள் தொழில் ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்களெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25–34 வயதுக்கு இடைப்பட்டவர்களெனவும், அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்களாவார். 45 சதவீதம் பேர் பெண்களாவாரெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 18 இலட்சத்து 21 ஆயிரத்து 479 என தெரிவிக்கப்பட்டுள்ளது.