கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று மட்டக்களப்பு செங்கலடி சிக்னல் சந்தியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (06) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை டிப்போவுக்கு சொந்தமான பஸ் நேற்று இரவு 12 மணிக்கு கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக மஹரகமவுக்கான பிரயாணித்த போது செங்கலடி சிக்னல் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாக்கியை உடைத்துக் கொண்டு கடை தொகுதிக்குள் உட்புகுந்துள்ளது.
இந்த விபத்தில் மின்பிறப்பாக்கி மற்றும் கடை தொகுதி பலத்த சேதமடைந்ததுடன் அந்த பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.