பாடசாலை கல்வி கட்டமைப்பிலும் உயர் கல்வித் துறையிலும் நெகிழ்ச்சித்தன்மையை வளர்ப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இத்திட்டம் முறையாக செயற்படுத்தப் பட்டால்,மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எளிதாக அமைவதுடன்,
ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளும் இலகுவாக அமையுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.களனி நாகாநந்தா பௌத்த கற்கை நிறுவக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.இங்கு உரையாற்றிய அமைச்சர்:
தற்போது, உலகின் முன்னணி மருத்துவப் பல்கலைகழங்களில் கூட 30 வீத விரிவுரைகள் மட்டுமே இடம்பெறுகின்றன. நடைமுறைப் பயிற்சி கல்விக்கு அதிக இடம் வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்புடன், குறிப்பிட்ட இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இந்த மாற்றத்தை கல்வியில் முன்னெடுக்க முடியும். மன ஒருங்கிணைப்புக்கான தனித்துவமான நிலை, அறிவியல் பாடங்களில் உள்ளன.
இதற்கமைய, இதனை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகள் அவசியம்.இதற்காக முதலில், யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவை பெறுமுடியும் என நம்புகிறேன்.
மே மாதம் 23 இல், பரிஸில் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதன் போது இது தொடர்பான தகவல்களை யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் சபைக்கு தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விடங்களை முன்வைக்க இது வசதியாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.