ஹொரணை பிரதேசத்தில் நேற்றுக்காலை காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நேற்று மதியம் துபாய் நாட்டுக்கு தப்பிச்செல்ல முனைந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதானார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நேற்றுக் காலைஹொரணை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி வேட்டு நடத்தி விட்டு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. ஹொரணை, கிரேஸ்லேன்வத்தை பகுதியில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது. சொகுசு கெப் ரக வாகனத்தில் பயணித்த வர்த்தகரான நபர் மீதே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் காயங்களுடன் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை முயற்சிக்குப் பின்னால், பாதாள கோஷ்டியினரின் தொடர்பு உள்ளதா அல்லது தனிப்பட்ட தகராறால் கொலைக்கு முயற்சிக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)