Monday, May 6, 2024
Home » யாழ் மத்தி ஸ்ரீ சத்திய சாயி சேவாநிலையத்தில் இன்று ஆராதனை மஹோற்சவம்

யாழ் மத்தி ஸ்ரீ சத்திய சாயி சேவாநிலையத்தில் இன்று ஆராதனை மஹோற்சவம்

by Gayan Abeykoon
April 24, 2024 6:48 am 0 comment

ல்லூர் இல.15/12, சங்கிலியன் வீதியில் அமைந்துள்ள யாழ் மத்தி ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம், குளோபல் கவுன்சில் (பிரசாந்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டது) பகவான் அருள் பாலிக்கும் புட்டபர்த்தியாகவே பக்தர்களின் கண்களுக்குத் தென்படுகின்றது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் புட்டபர்த்தியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை ஒத்ததாகவே உள்ளன. நிகழ்ச்சிகள் காலம் தவறாது உரிய நேரத்துக்கு நடைபெறுவதுடன், அந்நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு ஆனந்தமடைகின்றனர்.

புட்டபர்த்தியில் சுவாமிக்கு மகா மங்கள ஆராத்தி காட்டும் அதேவேளையில் யாழ் சேவா நிலையத்திலும் மகாமங்கள ஆரத்தி காட்டப்படுகின்றது. முக்கியமாக பகவானின் அகண்டநாம பஜனையின் முடிவில் காட்டப்பட்ட ஆராத்தி, 23.11.2023 பகவானின் 98 ஆவது அவதார தினத்தில் காட்டப்பட்ட ஆராத்தியெல்லாம் ஒரே நேரத்தில் அமைந்திருந்தமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இங்கு முக்கிய தினங்களில் பகவானுக்கு அணிவிக்கும் மலர் மாலைகள் எல்லாம் நீண்டு வளர்ந்து வருவதை பக்தர்கள் கண்டு மகிழ்கின்றனர்.

பிரசாந்தி நிலையத்தில் ஓங்காரம், சுப்ரபாதம் இசைக்கும் மண்டபத்தை ஒத்ததாக இங்குள்ள தியான மண்டபமும் அமைந்திருக்கின்றது. இங்கு காணப்படும் சாய் கணபதி, சீரடி சாய், பாபா பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா, சிவன், ஈஸ்வராம்பா, ஆஞ்சனேயர் அனைத்தும் புட்டபர்த்தியில் உள்ள அருட்கடாட்சம் உள்ள திருவுருவங்களை போல அருளை அள்ளி வழங்குவதாகவும் தெய்வீக கடாட்சம் மிளிருவதாகவும் அமைந்துள்ளது.

‘அன்பையும் சேவையையும் தமது இரு கண்களாக கொண்டு ஒற்றுமையுடனும் புனிதத்தன்மையுடனும் தெய்வீகத்தை மலரச்செய்யும் போது, பகவான் அவ்விடத்தில் ஆனந்தமாய் வீற்றிருந்து அன்பர் தம் குறைகளைத் தீர்த்தருளுவார்.

அந்த வகையில் இந்நிலைய பக்தர்கள், தொண்டர்கள், சேவாதாரிகள், குருமார்கள், பாலவிகாஸ் மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பக்திபூர்வமாக மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையாகவும் செயற்படுவதை காணமுடிகின்றது. அன்பு வழியில் தன்னம்பிக்கையுடனும் தெய்வ நம்பிக்கையுடனும் நேரான பாதையில் ஒழுங்காக வழி நடத்தும் தலைமைப் பதவியை வகிக்கின்ற ஸ்ரீமதி ரி. தங்கவேல் அவர்களும், முழுநேர சேவையை அர்ப்பணிப்புடன் புரிகின்ற சாய்சகோதரர் ஸ்ரீ க.கனகரத்தினம் அவர்களும், சாய்சகோதரி ஸ்ரீமதி கனகரத்தினம் அவர்களும் மற்றும் பணிபுரியும் குருமார், தொண்டர்கள், பக்தர்கள் அனைவரும் இந்நிலையத்தின் ஆன்மீக உச்சநிலைக்கு காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர்.

ஆராதனை மஹோற்சவம் இன்று 24.04.2024 அதிகாலை 5 மணிக்கு ஓம்காரம், தியானம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து காலை 8 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றம், தீபாராதனை இடம்பெறும். சிறப்பான நிகழ்ச்சிகளாக ஸ்ரீருத்ரம், பாதபூசை, அட்டோத்திரம், 1008 நாம அர்ச்சனை என்பன இடம்பெறும். 10:45 மணியளவில் சாயி சகோதரர் வைத்தியர் இ.சிவசங்கர் அவர்களின் ஆன்மீக உரை இடம்பெறும். தொடர்ந்து சாயி சகோதரி க.உமாசங்கர் அவர்களின் பக்திரச கீர்த்தனையும் பின்பு பஜனையும் மங்கள ஆரத்தியும் இடம்பெறும். இறுதி நிகழ்வாக உலர் உணவு வழங்கும் சேவை இடம்பெறும். தொடர்ந்து சீரடி மதிய ஆரத்தி இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்படும்.

நிலையத் தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர்கள், குருமார்கள், பக்தர்கள் தமது அர்ப்பணிப்பான சேவைகள் மூலம் இந்நிலையத்தை சிறந்த ஆன்மீக சேவா நிலையமாக நடத்தி வருவதனால் பக்தர்கள் நாடி வருகின்றனர். இங்கு பஜன் மண்டபம் ஒன்று கட்டப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே வெகுவிரைவில் பகவானின் ஆசிர்வாதத்தோடும் பக்தர்களின் ஆதரவோடும் பஜன் மண்டபம் ஒன்று அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

திருமதி லீலாவதி

மோகனசுந்தரம்…

தேசிய கல்வி இணைப்பாளர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT