மாத்தளை, வௌ்ளைக்கல், அருள்மிகு அழகர் பெருமாள் திருக்கோயிலின் வருடாந்த உற்சவம் கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அன்று தொடக்கம் தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் நடைபெறும் இந்த பூஜைகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் சுவாமி உள்வீதி உலா வருதலும் இடம்பெற்று வருகின்றன.
சித்திரா பௌர்ணமியான நாளை 23 ஆம் திகதி காலை 11 மணிக்கு அழகர் சுவாமிக்கு அபிஷேகமும் அலங்கார உற்சவமும் உள்வீதி உலா வருதலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்படும்.
நாளை இரவு 7 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் சுவாமி உள்வீதி உலா வருதலும் இடம்பெறும் நாளை மறுதினம் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி பூஜையும் நடைபெறும். 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ வைரவர் மடையும் விஷேட பூஜையும் நடைபெறும் என ஆலய தர்மகர்த்தா மு. சபாபதி தெரிவித்தார்.