யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ. நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி இக்கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
எனினும் இந்த சேவையை தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்தன. தற்போது கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீண்டும்ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக்கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பலே பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதி கொண்ட இந்தக் கப்பலில் பயணிக்க இருவழிக் கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200 ரூபாவை (8400 இந்திய ரூபாவில்) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பயணியொருவர் 60 கிலோ எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் பொதியொன்றின் எடை 20 கிலோவுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட வேண்டும். இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பை பார்த்து இரசித்து செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு, பயணியொருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.
இந்தக் கப்பல் சேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டின துறைமுகத்தை பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடமிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.
எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்ற போது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் இவ்விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புகளுக்கு அமைவாக நாகப்பட்டின துறைமுக பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மாதம் தோறும் 72 இலட்சம் ரூபா துறைமுக பயன்பாட்டுக் கட்டணமாக மத்திய அரசாங்கம் 12 மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல் சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது” என்றார்.
யாழ்.விசேட நிருபர்