நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இடைக்கால தடை விதிப்பதா?, இல்லையா? என்ற தீர்மானத்தை எதிர்வரும் 07ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பாகவும் அன்றையதினம் தீர்மானிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரகோன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டார். அதற்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் சிலரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியில் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது.