உரிய காலத்தில் 44 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் ஏற்பாடுகள் செய்யும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு சிறைகளிலுள்ள 44 இலங்கையருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சு 2024ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதத்தையொட்டி இலங்கை கைதிகளுக்கு அந்நாட்டின் உத்தரவின் பேரில் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சு, அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அத்தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் அரச மன்னிப்பை பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்யுமெனவும் அறிவித்துள்ளது.
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்துக்கு அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த விடயத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமைத்துவம் வெளிப்படுத்தியுள்ள அனுதாபத்தையும் பெருந்தன்மையையும் இலங்கைத் தூதரகம் பாராட்டியுள்ளது.