Wednesday, May 15, 2024
Home » கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை மே 11 இல் சந்நிதியில் ஆரம்பம்!

கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை மே 11 இல் சந்நிதியில் ஆரம்பம்!

by damith
April 29, 2024 6:00 am 0 comment

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.

அதற்கான ஏற்பாடுகள் தற்சமயம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறதென பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

சந்நதி கதிர்காமம் பாத யாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இம்முறை பாத யாத்திரையில் கலந்து கொள்வோர் கட்டாயம் சமய ஆசார முறைப்படி கலந்து கொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வேஷ்டியோடும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காவி சாறியுடனும் கலந்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள ஆலயங்களில் பஜனை மற்றும் சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் யாராவது சமய ஆசார முறைக்கு மாறான நடத்தையில் ஈடுபட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயாவேல்சாமி மேலும் தெரிவித்தார்.

55 நாள் நீண்ட இப் பாதயாத்திரையில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள் அல்லது உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் 0778386381 அல்லது 0763084791 அல்லது 0776139932 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப் பட்டுள்ளார்கள். கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எண்ணிலடங்கா அற்புதம் மிகுந்த கதிர்காம பாதயாத்திரையின் மகிமையினை அனுபவிக்க இம்முறை ஆயிரக்கணக்கான அடியார்கள் தயாராகி வருகிறார்கள்.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT