ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 8 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றியீட்டியது. இதன்மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் இலங்கை ஏ 1–0 என முன்னிலை பெற்றது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (28) நடைபெற்ற பரபரப்பான முதலாவது போட்டியில் 305 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி சார்பில் ஆரம்ப வீரர் நிஷான் மதுஷங்க (72) மற்றும் மத்திய வரிசையில் நுவனிந்து பெர்னாண்டோ (83) அரைச்சதம் பெற்று அணிக்கு கைகொடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்றது. ஆப்கான் அணி சார்பில் வலது கை வேகப்பந்து விச்சாளர் பிலால் சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மொஹமட் சலீம் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த ஆப்கான் அணியின் முதல் விக்கெட்டை 16 ஓட்டங்களிலேயே வீழ்த்துவதற்கு மொஹமட் ஷிராஸினால் முடிந்தது.
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியாஸ் ஹசன் (100) மற்றும் டார்வீஷ் ரசூலி (75) 160 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
எனினும் இந்த இருவரும் ஐந்து ஓவர் இடைவெளியில் ஆட்டமிழந்த பின் ஆப்கான் அணி தடுமாற்றம் கண்டது.
இலங்கை ஏ அணி சார்பில் சஹன் ஆரச்சிகே 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (30) இதே மைதானத்தில் நடைபெறும்.