தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி.க்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பிரான்ஸ் தூதுவருடன் தூதரக துணை தலைமை அதிகாரி மாரி நொயெல்லா தூரிசும் கலந்துகொண்டார். இலங்கைக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸ் தூதுவரை மனோ கணேசன் எம்.பி. இதன்போது கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ கணேசன் எம்.பி., “பிரான்ஸ் தூதுவருடன் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. தெற்கு உலக நாடுகள் தொடர்பில் பங்களிப்புகளை வழங்க பிரான்ஸ் இன்று உறுதியாக இருப்பது என்னை கவர்கிறது. ஜனாதிபதிகளான மெக்ரோன், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின் இலங்கைக்கு சமுத்திரதுறை தொடர்பில் உதவ பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக தூதுவர் மற்றும் தூதரக துணை தலைமை அதிகாரி ஆகியோர் கூறினர்.
இதன்போது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு நான் கோரினேன்.
நமது மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை முன்மொழிந்து முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுகள் நடத்துவது பற்றியும் கலந்துரையாடினோம்” என்றார்.